புது டெல்லி:
இந்தியாவில் இந்த ஆண்டு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கான பொதுக்கூட்டங்களை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நடத்தி வருகின்றன. அதேசமயம் இந்தியாவில் கொரோனா பரவலும் அதிவேகம் எடுத்துள்ளது. இன்றைய கணக்கின்படி, நாடு முழுவதும் 58,097 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 மாநில தேர்தலுக்கான பொதுக்கூட்டங்களை தடை செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்தலாமா, வேண்டாமா என்பதை அந்தந்த மாநில அரசுகள் தான், அவர்களுடைய நிலைமையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். கொரோனா பரவுகிறது என்று யாரும் பயப்பட வேண்டாம். நாம் கொரோனாவை எதிர்த்து சண்டையிட சரியான திட்டங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் தேவை.
இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.