இந்தியா

பாஜகவில் இது பதவி ஓய்விற்கான நிறமா? - கலாய்க்கும் நெட்டிசன்கள்

கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட போது மோடி பச்சை நிறத்திலான ஆடை அணிந்திருந்தார்.75 வயதை கடந்தால் அத்வானி அரசியலில் இருந்து விலகினார்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைக்க உள்ளது.

வருகிற 8-ந்தேதி இரவு 8 மணிக்கு நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பா.ஜ.க.வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஒரு புறம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட போது மோடி பச்சை நிறத்திலான ஆடை அணிந்திருந்தார். அதே நிறத்திலான ஆடையை அத்வானி அணிந்திருந்த பொழுது மோடி அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

75 வயதை கடந்தால் அத்வானி அரசியலில் இருந்து விலகினார். அதே போல் 73 வயதான மோடியும் விரைவில் ஓய்வு பெற போகிறார், அதற்கான நிறம் தான் இந்த பச்சை நிறம் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, பாஜகவில் ஓய்வு பெரும் வயது 75 என்பதால் இன்னும் 2 ஆண்டுகளில் மோடி ஓய்வு பெற்று விடுவார் என்பதால் பாஜகவில் அடுத்த பிரதமர் யார்? அமித்ஷாவா? என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.