2025 ஜூலை மாதம் மாநிலங்களவையில் ரெயில்வே அமைச்சகம் சமர்ப்பித்த தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பயணிகளிடமிருந்து 19,000-க்கும் மேற்பட்ட உணவு தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து கடந்த மாதம் பாட்னாவிலிருந்து டாட்டா நகர் சென்ற பாரத் ரெயிலில் தரமற்ற தயிர் வழங்கியதற்காக, இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்திற்கு ரயில்வே அமைச்சகம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
மேலும் அந்த ரெயிலில் உணவு விநியோகம் செய்த தனியார் நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையங்களிலும் ரயில்களிலும் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆராயும் நோக்கில், ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட உணவு கண்காணிப்பு அமைப்பு தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 800-க்கும் மேற்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி சமையலறைகள் 2,394 செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கேமராக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை புதுடெல்லியில் அமைந்துள்ள ஒரு மத்திய தலைமை அறையிலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.
இவை சமையலறை ஊழியர்கள் headcap, handgloves, facemask உள்ளிட்டவைகளை அணிந்துள்ளார்களா என்பதை சரிபார்க்கிறது. மேலும் சுத்தம் செய்தல் மற்றும் துடைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா ஆகியவையும் கண்காணிக்கிறது.
இந்த அமைப்பு 7 முதல் 8 மில்லிமீட்டர் அளவுள்ள சிறிய பூச்சிகளைக் கூட கண்டறிந்து, சம்பந்தப்பட்ட சமையலறை மேலாளருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இரண்டு மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.