இந்தியா

2036 ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த இந்தியா

ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

புதுடெல்லி:

உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது.

அடுத்த (2028ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது.

2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதிகள் உள்பட பல்வேறு தகவல்களும், ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி அளித்தால், இந்திய அரசு என்னென்ன உதவிகள் செய்யும் என்ற விவரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT