இந்தியா

இன்ஸ்டாகிராமில் தோன்றிய குழந்தை பாலியல் வன்கொடுமை விளம்பரங்கள்: மெட்டா நிறுவனத்திடம் விசாரணை

பாலியல் வன்கொடுமை தொடர்பான விளம்பரங்களை ஊக்குவிக்கும் இன்ஸ்டாகிராமை விசாரணை செய்யுமாறு தொழில்நுட்பத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

வாட்ஸ்அப்பின் முன்மொழியப்பட்ட பயனர்பெயர் (username) அம்சம் தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு கடந்த வாரத்தில் அரசாங்கம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

இது இணைய மோசடி, டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டத் தாக்குதல்களைக் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்ற கவலையையும் எழுப்பியது.

இதையடுத்து இந்த குறிப்பிட்ட அம்சத்தை நிறுத்தி வைக்குமாறு வாட்ஸ் அப்பிற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் குறித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு புகார் வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் மெட்டா நிறுவனத்தை விசாரணை செய்யுமாறு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று உத்தரவிட்டார்.

மேலும் இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான விளம்பரங்கள் எவ்வாறு தோன்றின என்பதை தெளிவுபடுத்துமாறும் உரிய விளக்கம் கேட்டும் மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட உள்ளது.

மெட்டா நிறுவனத்தின் மீது கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து இரண்டாவதாக மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறைக்கு புகார் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.