இந்தியா

கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த விவகாரம்: மத்திய பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்தது தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Maalaimalar

இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்தது தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் முதல்கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் தற்போது பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், 3 நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஒரு மண்டல அதிகாரி மற்றும் ஒரு உதவி பொறியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி மோகன் யாதவ் அறிவித்தார்.

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த பிரச்சனை கடந்த 6 மாதங்களாக நீடித்து வருவதாகவும், இதன் விளைவாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அந்த பகுதியில் வசிக்கும் 1,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.