இந்தியா

பசுமைக் கடன் திட்டம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவின் புதிய முன்னெடுப்பு

"இதன் மூலம் பசுமையான வளர்ச்சிக்கும், நிலையான பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது."

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற ஆண்டு காலநிலை மாற்ற மாநாடான COP28-ல் பிரதமர் நரேந்திர மோடி பசுமைக் கடன் (Green Credit) திட்டத்தை அறிவித்தபோது, அது பெரும் கவனத்தை ஈர்த்தது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change) 2023 ஜூன் மாதத்தில் பசுமைக் கடன் திட்டத்திற்கான வரைவு விதிகளை வெளியிட்டு, 60 நாட்கள் சோதனை அடிப்படையில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த முன்முயற்சி, நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை நோக்கமாகக் கொண்ட நாட்டின் நீண்டகால அக்கரையை குறிக்கிறது.

காலநிலை மாற்றம், வன அழிப்பு, நீர்வள பற்றாக்குறை மற்றும் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், இந்திய அரசு "பசுமைக் கடன் திட்டம்" (GCP) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ளும் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பசுமைக் கடன் என்றால் என்ன :

பசுமைக் கடன் என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் ஒரு ஊக்க அலகாகும். மரக்கன்றுகள் நடுதல், நீர் பாதுகாப்பு, நில மறுசீரமைப்பு, கழிவு மேலாண்மை, காற்று மாசுபாட்டைக் குறைத்தல், நிலையான விவசாயம் போன்ற பல்வேறு செயல்பாடுகள் இதன் கீழ் இடம்பெறுகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் பசுமைக் கடன்களை எதிர்காலத்தில் பரிமாற்றம் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் முதன்முதலில் 2023-24 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பின்னர் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இதற்கான விதிமுறைகளை வெளியிட்டது. இந்தத் திட்டத்தின் நிர்வாக பொறுப்பை இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் மேற்கொள்கிறது.

திட்டத்தின் முக்கிய அம்சமாக, வெறும் மரக்கன்றுகள் நடுவது மட்டுமே போதாது. நடப்பட்ட மரங்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உயிருடன் வளர்ந்து, 40 சதவீதத்திற்கும் அதிகமான மரக்கூடார அடர்த்தியை உருவாக்கினால் மட்டுமே பசுமைக் கடன்கள் வழங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. இதன் மூலம் உண்மையான சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை உறுதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும்:

இந்தத் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது. பல்வேறு நிறுவனங்கள் சமூகப் பொறுப்பு திட்டங்களின் கீழ் வனமருத்துவம் மற்றும் நில மறுசீரமைப்பு பணிகளில் முதலீடு செய்து வருகின்றன. இதன் மூலம் பசுமையான வளர்ச்சிக்கும், நிலையான பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், இந்தத் திட்டம் குறித்து சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் கவலைகளையும் முன்வைத்துள்ளனர். குறிப்பாக, "சீரழிந்த வன நிலங்கள்" என்ற பெயரில் உள்ளூர் மக்களின் பாரம்பரிய பயன்பாட்டு நிலங்கள் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்லக்கூடும் என்றும், இயற்கை உயிரினப் பன்முகத்தன்மை பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். திட்டம் வெளிப்படைத்தன்மையுடனும் சமூக பங்களிப்புடனும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

தகுதி:

பசுமைக் கடன் (Green Credit):

சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் பசுமைக் கடன்களைப் பெற தகுதியுடையவர்கள்.

கார்பன் கடன் (Carbon Credit):

முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவாக கார்பன் உமிழ்வை ஏற்படுத்தும் அல்லது கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திட்டங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பொதுவாக கார்பன் கடன்களைப் பெறுகின்றன.

மொத்தத்தில், பசுமைக் கடன் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்புடன் முன்னெடுக்க இந்தியா மேற்கொண்டுள்ள முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. சரியான கண்காணிப்பு மற்றும் செயல்படுத்தல் மூலம், இந்தத் திட்டம் பசுமையான இந்தியாவை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என நம்பப்படுகிறது.