இந்தியா

இந்தியாவின் தரவுகள் அமெரிக்காவுக்கு விற்பனை.. டிரம்ப் கட்டுப்பாட்டில் மோடி - அசாமில் ராகுல் பேச்சு

அசாமில் மோடி, அமித் ஷா மற்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் Land ATM நடத்தி வருகிறார்கள். அதானி, அம்பானி மற்றும் பதஞ்சலி நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான பிகா நிலங்களை வாரி வழங்கியுள்ளனர்.

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய சட்டமன்றங்களுக்கு இந்த மாத இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

அசாமில் கடந்த 5 ஆண்டுகளாக ஹிமாந்தா பிஸ்வா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இந்த சூழலில் மக்களவை எதிரிகட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பங்கேற்றார்.

அங்கு அவர் பேசியதாவது,

சமீபத்திய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் விவசாய முறையை அமெரிக்க விவசாயிகளுக்காக மோடி திறந்துவிட்டுள்ளார்.

சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், பருத்தி போன்றவற்றை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வழிவகை செய்ததன் மூலம், சிறிய நிலங்களைக் கொண்ட இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

பெரிய அளவிலான இயந்திரங்களைப் பயன்படுத்தும் அமெரிக்க விவசாயிகளால் இந்திய விவசாயம் அழியும்.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மோடி அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டார். இன்று ரஷியா , ஈரான் அல்லது ஈராக் போன்ற நாடுகளிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டுமானால், நாம் டிரம்ப்பிடம் அனுமதி கேட்க வேண்டிய நிலை உள்ளது.

அதேபோல இந்தியாவின் தரவுகளை அமெரிக்கா தனது விருப்பப்படி பயன்படுத்த மோடி அவர்களுக்கு விற்றுவிட்டார்.

சுமார் 3.5 மில்லியன் எப்ஸ்டீன் கோப்புகள் இன்னும் வெளிவராமல் இருப்பதால் அதை ஒரு ஆயுதமாக வைத்துக்கொண்டு டிரம்ப் மோடியைக் கட்டுப்படுத்துகிறார்.

அதானியின் ஊழல்கள் டிரம்ப்பிற்குத் தெரியும் என்பதால், அதன் மூலம் மோடியின் நிதி அமைப்பை டிரம்ப் தனது பிடியில் வைத்துள்ளார்.

தான் நினைக்கும் போது அவரை அழிப்பேன் என்று டிரம்ப் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார்.

ஹிமந்த பிஸ்வா சர்மா தான் இந்தியாவின் ஊழல் மிகுந்த முதலமைச்சர்.

அசாமில் மோடி, அமித் ஷா மற்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் Land ATM நடத்தி வருகிறார்கள்.

அதானி, அம்பானி மற்றும் பதஞ்சலி நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான பிகா நிலங்களை வாரி வழங்கியுள்ளனர்.

டிரம்ப் பிரதமரைக் கட்டுப்படுத்துகிறார், பிரதமர் உங்கள் முதலமைச்சரைக் கட்டுப்படுத்துகிறார்" என்று தெரிவித்தார்.