இந்தியா

இருட்டில் இந்தியர்கள்.. நாட்டு மக்களின் 'தரவு'களை தாரைவார்க்கிறதா மத்திய அரசு? - ராகுல் கேள்வி

இந்தியர்களின் சுகாதாரத் தரவுகள், நிதித் தரவுகள் மற்றும் அரசு தரவுத்தளங்கள் இந்தியாவிலேயே சேமிக்கப்படுமா?

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் இந்தியா - அமெரிக்கா இடையே ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தால் நாட்டின் தரவுகளின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "இந்தியாவின் தரவு அதன் மக்களுக்குச் சொந்தமானது. ஏஐ பொருளாதாரத்தில் இதுவே நமது மிகப்பெரிய பலம். ஆனால், நமது தரவு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து நாம் இருட்டில் வைக்கப்பட்டுள்ளோம்.

உலகளாவிய தொழில்நுட்பப் போட்டியில் நாம் முன்னணியில் இருக்க வேண்டும், ஆனால் அரசு எதை மறைக்கிறது என்று தெரியவில்லை.

ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவுடன் 'வர்த்தகத் தடைகளைக் குறைப்பது' என்பது இந்தியாவின் தரவுகளுக்கு என்ன விளைவை ஏற்படுத்தும்?

இந்தியர்களின் சுகாதாரத் தரவுகள், நிதித் தரவுகள் மற்றும் அரசு தரவுத்தளங்கள் இந்தியாவிலேயே சேமிக்கப்படுமா?

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியத் தரவுகளை இங்கேயே சேமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அதிகாரம் இந்தியாவிடம் இருக்குமா? நமது சொந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தத் தரவுகளைப் பயன்படுத்த முடியுமா?

கட்டமைப்பு, சமநிலை, சுயாட்சி போன்ற பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்தும் அரசு, குறிப்பிட்ட விவரங்களை ஏன் மறைக்கிறது?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா, இந்தியா தனது டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தங்களில் நாட்டின் நலன்களையும், தரவு மேலாண்மை குறித்த ஒழுங்குமுறை அதிகாரத்தையும் முழுமையாகப் பாதுகாத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்