புதுடெல்லி:
மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் படகு மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும், சந்தேகத்துக்கு இடமான கப்பல்கள் வந்து செல்வதாகவும் இந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் கடற்படையினரின் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி ஹெலிகாப்டர் மூலமும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தர்காஷ் கப்பல் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்துக்கு இடமான படகு ஒன்றை, தர்காஷ் கப்பல் வழிமறித்து நிறுத்தியது.
இதையடுத்து கடற்படையினர் அந்த படகை சோதனையிட்டனர். அப்போது அதில் சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகள் அதிக அளவில் இருந்தன. விசாரணையில் அதில் 2,386 கிலோ ஹாஷிஷ் என்ற போதைப்பொருளும், 121 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.