பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 
இந்தியா

பாகிஸ்தானுடனான பயங்கரவாத போரில் வெற்றி பெறுவோம் -ராஜ்நாத் சிங் உறுதி

மதத்தின் பெயரால் நாடு பிரிக்கப்பட்டது வரலாற்றுத் தவறு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி: 

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50 ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி  அந்த போரில் பயன்படுத்தப்பட்ட ராணுவ பீரங்கி, ஆயுதங்கள், தளவாடங்கள் இடம்பெற்ற கண்காட்சி தலைநகர் புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார்.  

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,  1971 ஆண்டு நடைபெற்ற போர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைவுபடுத்துவதாக கூறினார்.  

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது மதத்தின் பெயரால் நாடு பிரிக்கப்பட்டது வரலாற்றுத் தவறு.  1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் பாகிஸ்தானின் அனைத்து திட்டங்களையும் நமது பாதுகாப்பு படை தோற்கடித்தது.  தற்போதும் அந்த நாட்டில் இருந்து வரும் பயங்கரவாதத்தை வேருடன் அழிக்கும் நடவடிக்கையில் நமது பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. 

பாகிஸ்தானுடனான  நேரடி போரில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். நான் உறுதியாக கூறுகிறேன், அந்நாட்டில் இருந்து ஏவப்படும் பயங்கரவாதம் என்ற மறைமுக போரிலும் நாம் வெற்றி பெறுவோம்.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதால் இந்த ராணுவ தளவாட கண்காட்சியை எளிமையை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.