ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய அரசு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது கடந்த 16-ம் தேதி பாகிஸ்தான் நடத்திய காட்டுமிராண்டித்தனமான வான்வழித் தாக்குதலை இந்தியா திட்டவட்டமாகக் கண்டிக்கிறது. இது ஒரு கோழைத்தனமான, மனசாட்சியற்ற வன்முறைச் செயல். எந்த வகையிலும் இது ஒரு ராணுவ இலக்காக இருக்க முடியாது.
பாகிஸ்தானின் இந்த கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீதான அப்பட்டமான தாக்குதலாகவும், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாகவும் உள்ளது.
புனித ரமலான் மாதத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, இன்னும் அதிக வன்மையான கண்டனத்தைக் கோருகிறது. இந்தக் குற்றச் செயலை அரங்கேற்றியவர்களை சர்வதேச சமூகம் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறது. இந்த துயரமான தருணத்தில் ஆப்கன் மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கிறது என தெரிவித்துள்ளது.