இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரமடைந்த ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை ஒட்டுமொத்தமாக 16 ஆண்டுகள் 286 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார்.
இருப்பினும், இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலுக்குப் (1952) பிறகு அவர் தடையின்றித் தொடர்ந்து பதவியில் நீடித்தது 4,398 நாட்கள் ஆகும்.
இதை தொடர்ந்து, நேருவின் சாதனையை முறியடித்து, நாட்டின் வரலாற்றிலேயே தொடர்ந்து அதிக நாட்கள் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற புதிய மைல்கல்லை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 10) சாதனையை படைத்துள்ளார்.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இச்சாதனை நிகழ்ந்துள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மொத்தம் 14 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதமராக இருந்தபோதிலும், அவரது ஆட்சி தடையற்ற தொடர்ச்சியான ஆட்சியாக இருக்கவில்லை.
ஆனால், மோடி 2014 மே மாதம் பதவியேற்றது முதல் 2019 மற்றும் 2024 பொதுத்தேர்தல் வெற்றிகள் மூலம் தொடர்ந்து தடையின்றி ஆட்சியில் நீடித்து வருகிறார்.
இந்த சாதனை குறித்து பிரதமர் மோடி தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "மக்களுக்குச் செய்யும் சேவையே நல்லாட்சியின் உண்மையான அளவுகோலாகும்.
பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வுடன் செயல்படுபவர்களால் மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்சாதனையைக் கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் NDA கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த 12 ஆண்டுகால ஆட்சியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடம், வந்தே பாரத் ரயில்கள், உலகின் மிக உயரமான ஒற்றுமையின் சிலை, மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS விக்ராந்த் போர்க்கப்பல் போன்ற பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் இக்கூட்டத்தில் முக்கியமாக நினைவுகூரப்பட உள்ளன.