பாலசோர்:
நிலத்தில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் பிரலே ஏவுகணை உருவாக்கி உள்ளது. 150 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது பிரலே. போர்க்களப் பயன்பாட்டிற்காக திட-எரிபொருள் கொண்டு இயங்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் கடல் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அப்துல்கலாம் தீவில் இந்த ஏவுகணை இன்று பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இன்று காலை பத்தரை மணிக்கு நடைபெற்ற இந்த சோதனையின் போது சீறி பாய்ந்து சென்ற பிரலே, நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியாக தாக்கியது. ஏவுகணை பரிசோதனையின் முதல் கட்ட வெற்றிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏவுகணை தயாரிப்பில் பங்கேற்ற குழு உறுப்பினர்களை ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றம் வளர்ச்சி நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி பாராட்டினார். 500 முதல் 1000 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களை சுமந்து செல்லும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட இந்த ஏவுகணை நமது ராணுவத்திற்கு தேவையான உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.