இந்தியா

சிக்கனமாக பயன்படுத்த சொன்ன பிரதமர்.. எண்ணெய், எரிவாயு கையிருப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்

நாட்டில் 1 கோடியே 26 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, இந்தியாவில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இருப்பு உள்ளதாவும் 45 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு (எல்பிஜி) இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் 1 கோடியே 26 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வணிக ரீதியிலான சிலிண்டர் விற்பனை 17,000 டன்களையும், ஆட்டோ எல்பிஜி விற்பனை 762 டன்களையும் தாண்டியுள்ளது. கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு நிலையங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 703 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வலுவாக உள்ளது.

சர்வதேச அளவில் போர் காரணமாக எரிபொருள் விலை 30% முதல் 70% வரை உயர்ந்திருந்தாலும், இந்தியாவில் விலையை உயர்த்தாமல் பொதுமக்களை அரசு பாதுகாத்துள்ளது.

இதற்காக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பை ஏற்றுக்கொள்வதாகவும், 2026ன் முதல் காலாண்டில் இந்த இழப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக எரிபொருள் மற்றும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கப் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் சிக்கனம், ஓராண்டுக்கு தங்கம் வாங்காமல் இருத்தல், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தல், வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்றவற்றை கைக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.