மத்திய கிழக்கு போரால் எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
போர் முடிவின்றி தொடர்வதால் வரும் நாட்களில் இன்னும் மோசமான நிலை வரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இது பொருளாதாரத்திலும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இது இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்புக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்நிலையில் அந்நிய செலாவணி வெளியேற்றத்தை குறைத்து, பொருளாதாரத்தை நிலைநிறுத்த மத்திய அரசு பல வழிகளில் முயன்று வருகிறது.
இதனொரு பகுதியாக விலைமதிப்பற்ற உலோகங்கள் மீதான இறக்குமதி வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்கும் முயற்சியாக இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 1.14 லட்சம் கோடி மதிப்பிலான கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மாறாக 2025-26 ஆண்டுக்கான ரிசர்வ் வங்கி அறிக்கையில் அந்த நிதியாண்டில் மத்திய வங்கியின் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.