உத்தரப் பிரதேசத்தில் சுதந்திர தின விழாவில் பள்ளிச் சுவர் இடிந்துவிழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், மடலா பதேபூர் கிராமத்தில் உள்ள அல் ஹசன் பள்ளியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடியேற்றம் முடிந்து, மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தனர்.
கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக அருகில் இருந்த வீடுகளை சேர்ந்த சிறுவர்கள் சிலர் பள்ளியின் நுழைவு வாயிலின் கான்கிரீட் சுவர்க் கூரை மீது ஏறியுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்தக் கூரை திடீரென இடிந்து விழுந்தது. கூரை இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளுக்குள் 3 சிறுவர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதில் நயீம் என்பவரின் 8 வயது மகனான நிஜாம் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
மேலும் சேப் அலி மற்றும் ஷைதான் ஆகிய இரு சிறுவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சம்பல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கணகாணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் சம்பவம் குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டனர்.