294 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்திற்கு ஏப்.23, ஏப்.29 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சில தொகுதிகளுக்கு மறுவாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.
அதன்படி, கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டவாறே பாஜக 207 தொகுதிகளை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளை கைப்பற்றியது.
இதன்மூலம் பாஜக அங்கு முதல்முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ராஜினாமா செய்யும்படி யாரும் என்னைக் கட்டாயப்படுத்த முடியாது. நான் ராஜினாமா செய்ய மாட்டேன், நான் தோற்கவில்லை, நான் ராஜ்பவனுக்குச் செல்ல மாட்டேன். அவர்கள் அரசியலமைப்பு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம்.
நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை. எங்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பது அவர்களின் முயற்சி. தேர்தல் ஆணையத்தின் மூலம் அவர்கள் எங்களைத் தோற்கடிக்கலாம், ஆனால் தார்மீக ரீதியாக, நாங்கள்தான் தேர்தலில் வென்றோம்.
ஜனநாயக உரிமைகளையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையையும் சீர்குலைத்து, தலைமைத் தேர்தல் ஆணையரே இந்தத் தேர்தலில் வில்லனாக மாறியுள்ளார். வாக்களித்த பிறகு இயந்திரங்கள் எப்படி 80-95% சார்ஜ் இருப்பதாகக் காட்டின? அது எப்படி சாத்தியம்?
நாங்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உட்பட ஒட்டுமொத்த அரசு இயந்திரத்திற்கும் எதிராகப் போராடினோம். வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 90 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றபோது, 32 லட்சம் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டன. ஆனால், அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் மேலும் ஏழு லட்சம் பெயர்கள் சேர்க்கப்பட்டன.
நாங்கள் பா.ஜ.க-விற்கு எதிராகப் போராடவில்லை; அந்த காவிக் கட்சிக்காக வேலை செய்த தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவே போராடினோம். இது பா.ஜ.க-விற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே நடந்த ஒரு 'செட்டிங்’.
என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு தேர்தலை நான் கண்டதில்லை. சிறுவயது முதல் 2004-ல் நடந்த தேர்தல் உட்பட பல தேர்தல்களை நான் கண்டிருக்கிறேன், ஆனால் இது போன்ற ஒன்றை நான் பார்த்ததில்லை.
எனது இலக்கு மிகவும் தெளிவாக உள்ளது. இப்போது நான் எந்தப் பதவியிலும் இல்லை, அதனால் நான் ஒரு சாமானிய குடிமகன். நான் எந்த அதிகாரப்பூர்வ பதவியையும் பயன்படுத்துகிறேன் என்று நீங்கள் சொல்ல முடியாது. நான் இப்போது ஒரு சுதந்திரப் பறவை, எனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகச் சேவை செய்ய அர்ப்பணித்துள்ளேன். கடந்த 15 ஆண்டுகளில் கூட, நான் ஒரு பைசா கூட ஓய்வூதியமாகவோ அல்லது சம்பளமாகவோ பெறவில்லை.” என தெரிவித்தார்.