மும்பை:
பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் பீகார் சென்ற பிரதமர் மோடி சுகாதாரம், மின்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே, பிரதமரின் பீகார் பயணம் குறித்து மாநில முன்னாள் துணை முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். போலி வாக்குறுதிகளைத் தந்து, ஓட்டு திருட்டில் ஈடுபடுவதாக பிரதமர் மீது அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக, மகாராஷ்டிராவின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மிலிந்த் ராம்ஜி நரோடே கட்ச்ரோலி போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மீது அவதூறு கருத்து தெரிவித்த தேஜஸ்வி மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து பேசிய தேஜஸ்வி, வழக்குக்கு பயப்படுபவர்கள் அல்ல நாங்கள். உண்மையை தொடர்ந்து உரக்கச் சொல்வோம் என தெரிவித்தார்.