இந்தியா

ஐதராபாத்தில் நள்ளிரவில் இருதரப்பு இடையே பயங்கர கல்வீச்சு மோதல் - போலீசார் தடியடி!

ஐதராபாத் நகரின் ஆசிப் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு பயங்கரமான கல்வீச்சு தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகை வரவிருப்பதால் சட்டவிரோதமாக மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க தெலுங்கானா உள்ளூர் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு அந்த வழியாக ஒரு கண்டெய்னர் லாரி வந்துள்ளது. அதில் சட்டவிரோதமாகப் பசுக்கள் கடத்தப்படுவதாகச் சில பசு பாதுகாவலர்கள் மத்தியில் வதந்தி பரவியுள்ளது. அப்போது அந்த லாரியில் தான் பசுக்களை கொண்டு செல்கிறார்கள் என்று ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அந்த லாரியை நடுரோட்டில் மறித்து சோதனையிட்டனர்.

லாரியை சோதித்து பார்க்கையில் அட்டை பெட்டிகள் மற்றும் ப்ளைவுட் இருப்பதாய் அந்த கும்பல் கண்டனர். ஆனாலும் லாரி டிரைவர்கள் மீது அந்த கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர்.

இதை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு கும்பல் லாரி டிரைவர்களுக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்கு வாதம் தொடர்ந்து நீடித்த நிலையில், அந்த இரு கும்பல்களுக்கிடையே மாறி மாறி கல்வீச்சு தாக்குதலை நடத்திக்கொண்டனர்.

இந்நிலையில் தகவல் அறிந்த போலீசார் வந்து பார்க்கையில், பல பொதுமக்களும் அங்கிருந்த வாகனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தன. உள்ளூர் போலீசார் இருவரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலைமை கையை மீறி சென்றதால் கூடுதல் போலீஸ் படைகள் வந்தனர். மேலும் கும்பலைக் களைக்க போலிசார் அதிரடி கலவரத்தில் இறங்கினர்.பின்னர் அந்த கூட்டம் களைந்தது.

நள்ளிரவில் வன்முறை வெடித்த இடத்திற்கு AIMIM கட்சியின் கோல்கொண்டா பகுதியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினார்கள்.

வதந்தி பரப்பி சட்டத்தைக் கையில் எடுத்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆசிப் நகரின் மீது அரசு ஊழியர்களை தாக்கியதற்காகவும், பொது மக்களின் அமைதியை கெடுத்ததற்காகவும் காவல் துறையினர் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மீண்டும் மோதல் வெடிக்காமல் இருக்க ஆசிப் நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர ரோந்துப் பணிகளும் நடந்து வருகின்றன.