உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்க ஊக்குவிக்கும் வீடியோக்களை வெளியிட்டு பாடம் எடுத்த பெண் யுடியூபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் வசித்து வரும் சிக்கா மெத்ரே 'She will say no - let her' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார். 20,50 சப்ஸ்க்ரைபர்கள் கொண்ட இந்த சேனலில் இதுவரை 115 வீடியோக்களை அவர் பதிவேற்றியுள்ளார்.
அந்த வீடியோக்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அவர்களுடன் பாலியல் உறவு வைப்பதை ஊக்குவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் நாராயண் பரத்வாஜ் என்பவர் அளித்த புகாரின் பேரிலேயே தற்போது மெத்ரே கைது செய்யப்பட்டுள்ளார். பரத்வாஜ் தனது புகாரில், இந்த வீடியோக்கள் மூலம் மெத்ரே இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிக்கா மெத்ரேவிடம் இருந்து லேப்டாப் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவரது யூடியூப் சேனலையும், சமூக வலைதளக் கணக்குகளையும் முடக்கியுள்ளனர். அவர் மீது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது யூடியூப் பக்கத்தை பிரைவேட் மோடில் வைத்திருந்ததால் சிக்கா மெத்ரே இத்தனை நாள் சிக்காமல் இருந்துள்ளார். இவர் டெல்லியில் உள்ள நேஷனல் பேஷன் டெக்னோலஜி இன்ஸ்டிடியூட்டில் [NIFT] பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.