நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாட்டின் கல்வி முறை கடந்த 10 ஆண்டுகளில் சீரழிந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு தேர்வுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளன.
தேர்வுகளில் நடைபெறும் மோசாடிகளால் இளைஞர்கள் எதிர்காலத்தைத் தொலைக்கின்றனர். நீட் தேர்வில் ஓராண்டுக்கு 1.32 லட்சம் கோடி புழங்குகிறது.
வினாத்தாள் கசிவு காரண்மாக மறு தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். டெல்லியில் மாணவர்களை தாக்கிய போலீசாரை அந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும்.
மாணவர்களின் முக்கிய மூன்று வலியுறுத்தல்களை ஏற்றால் போராட்டம் முடிவுக்கு வரும்.
முதல் கோரிக்கை முற்றிலும் நியாயமானது. கல்வி அமைச்சராக தோல்வி அடைந்தவரும், ஊழல்வாதி என அறியப்பட்டவருமான தர்மேந்திர பிரதான், தனது பதவியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
இது 100 சதவீதம் நியாயமான கோரிக்கை. இதில் எந்தத் தவறும் இல்லை. இந்த அமைப்பை நடத்துவதற்குத் தகுதியற்றவர் என்பதை அவர் இந்தியாவுக்கும் உலகிற்கும் காட்டியுள்ளார்.
இரண்டாவது கோரிக்கை என்னவென்றால், நமது மாணவர்கள் மீது கை நீட்டிய ஒவ்வொரு நபரும் பொறுப்பேற்க வைக்கப்பட வேண்டும்.
மூன்றாவது விஷயம் என்னவென்றால், இந்த முழு அமைப்பையும் நடத்தி வரும், இறுதியாக இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய அந்த மனிதர், நடந்தவற்றுக்காக மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் கண்ணியத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
எனவே, இந்தக் கோரிக்கைகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம், தெருக்களில் இருக்கும் ஒவ்வொரு மாணவரையும் நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என தெரிவித்தார்.