அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.
சந்தியா (29) என்ற இளம்பெண் ஃபரிதாபாத்தின் சிக்ரோனா கிராமத்தில் உள்ள சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் காலை 9:30 மணியளவில் ஆசிரியை சந்தியா பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த ஒரு நபர், அவரைப் பார்க்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
பள்ளி ஊழியர்கள் தகவலளித்ததை அடுத்து, ஆசிரியை முதன்மை வாயில் அருகே வந்தபோது, மறைந்திருந்த அந்த நபர் திடீரென அவர் மீது பாய்ந்து, இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இக்கொடூரத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, ஆசிரியையின் முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 27 முறை கத்திக் குத்துகள் விழுந்துள்ளதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமித்(21) என்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் இக்கொலை பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, அமித் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஆசிரியை சந்தியா காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமித், பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் குற்றவாளி அமித்தை ஃபரிதாபாத் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.