கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையம் மூலம் மேற்பார்வை மேற்கொள்ளப்பட்டு தரிசன முறையில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் பெற 18 முதல் 24 மணி நேரம் வரை காத்துக் கொண்டு இருந்தனர். இப்போது அதே எண்ணிக்கையிலான பக்தர்கள் 8 மணி நேரத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2-ந் தேதி 91,005 பேர் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு 12 மணி நேரத்திற்குள் தரிசனம் வழங்கப்பட்டது. இதனால் 65 சதவீத பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தரிசனம் விரைவாக முடிவதால் பக்தர்கள் தங்கள் அறைகளை காலி செய்கின்றனர். இதனால் புதியதாக வரும் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 78,024 பேர் தரிசனம் செய்தனர். 36,826 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின. அதற்கு வெளியே நீண்ட வரிசையில் பத்கர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.