ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவராக கடந்த 2023 முதல் பதவி வகித்து வரும் ராகவ் சதாவை அப்பதவியிலிருந்து ஆம் ஆத்மி நீக்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவருக்குப் பதிலாக பஞ்சாப் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஆம் ஆத்மி இதுதொடர்பாக மாநிலங்களவைச் செயலகத்திற்கு எழுதிய அதிகாரப்பூர்வ கடிதத்தில் ராகவ் சதா பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சி தொடங்கியதிலிருந்தே இதில் பயணித்து வரும் மற்றும் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர் என கூறப்படும் சதா ஆம் ஆத்மியின் சமீபத்திய முக்கிய நிகழ்வுகளில் எதிலும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மேலும் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கிலிருந்து கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டபிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு, பொதுக்கூட்டம் போன்றவற்றிலும் கலந்துகொள்ளவில்லை. இதனால் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டிருக்கும் என கூறப்பட்டு வந்தநிலையில் இத்தகவல் வெளியாகி உள்ளது.
கட்சியின் தேசிய பொருளாளராகப் பணியாற்றியுள்ள சதா கட்சியின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். டெல்லி குடிநீர் வாரியத்தின் துணைத் தலைவராகவும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது கட்சியின் பஞ்சாப் மாநில இணைப் பொறுப்பாளராக உள்ளார்.