குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் எம்வி யூரோப் என்ற கொள்கலன் கப்பல் கடலின் நடுவே இரவு நேரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது கப்பலில் இருந்து சில சந்தேகத்திற்குரிய பொருட்கள் கடலில் வீசப்படுவதை குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் பார்த்துள்ளனர்.
இதையடுத்து இந்திய கடலோர காவல்படைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்பு படையினருடன் இணைந்து கடலில் வீசப்பட்ட பைகளை மீட்டனர்.
இந்த பரிசோதனையில் பைகளில் இருந்த 115 கிலோ கோகைன் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ரூ.1150 கோடி வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய கடலோரக் காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் இணைந்து நடத்திய 15வது வெற்றிகரமான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.