இந்தியா

கார் பானெட்டில் வாலிபரை கட்டி வைத்து தாக்குதல்: வீடியோ வெளியானதால் போலீசார் நடவடிக்கை

சம்பவம் கடந்த 29-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது.இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் திருடியதற்காக வாலிபர் ஒருவரை காரின் முன்பக்க பகுதியில் கட்டிவைத்து தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோத்ரா தாலுகா கன்கு தம்பலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் பொருட்களை திருட முயன்றுள்ளார். இதுகுறித்து அறிந்த கடை உரிமையாளர் மற்றும் உடன் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து அடித்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இச்சம்பவம் கடந்த 29-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் கவனத்திற்கு சென்ற வீடியோ குறித்து விசாரணை நடத்தி இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை ஒப்படைக்காமல், சட்டத்தை கையில் எடுத்து கொடூரமான முறையை கையாளும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதால் இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

SCROLL FOR NEXT