இந்தியா

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண நேபாளம் புறப்பட்டது குஜராத் தடயவியல் குழு

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண குஜராத் தேசிய தடயவியல் குழு நேபாளம் செல்கிறது.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள விபத்தில் உயிரிழந்த மக்களை அடையாளம் காண்பதற்காக, குஜராத்தை தளமாக கொண்ட தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு என்று நேற்று மாலை நேபாளத்திற்கு புறப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் இந்த திட்டம், பேரிடரால் உயிரழந்தவர்களை நேரடியாக அடையாளம் காணும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது.

தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 12, 2025 அன்று நடந்த AI-171 விமான விபத்தில் உயிரிழந்த நபர்களின் டி.என்.ஏ.வை கண்டறியும் செயல்முறையை 10 நாட்களில் முடித்தது.

இதன்மூலம் மேம்படுத்தப்பட்ட தடயவியல் அறிவியல் திறன்கள், சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் பாராட்டுகளையும், தேசிய எல்லைகளை கடந்து குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தையும் பெற்றது.

மேலும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள், இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவில் காணாமல் போன, அமெரிக்க படை வீரர்களை கண்டறிய அமெரிக்க பாதுகாப்பு துறையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் டி.என்.ஏ தடயவியல் சிறப்பு மையத்தின் தலைவர் டாக்டர் பார்கவ் படேல் தலைமையிலான குழுவினர், நேபாள வெள்ளத்தில் இறந்துபோனவர்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து அடையாளம் காண உள்ளனர்.

இந்த குழுவினரின் பணி, காணாமல் போன குடும்ப உறுப்பினர்களை தேடும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.