நடப்பாண்டு நீட் -யுஜி தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளால் நாடு முழுவதும் வெடித்துள்ளப் போராட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகளாவது;
“அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களிடத்திலும் சென்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் எனவும் தெரிவித்துள்ளனர். அரசு முழுமையான விவாதத்தை நடத்தத் தயாராக இருக்கும் நிலையில், மேலும் பல நிபந்தனைகளை விதித்து அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வது சரியல்ல. நீட் விவகாரத்தையும், இளம் மாணவர்களையும் முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சி தனது வழக்கமான பாணியில் அவையை முடக்கப் பார்க்கிறது.
விவாதம் நடந்தால் உண்மை வெளிவந்துவிடும், அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தெரியவந்துவிடும் என்பதால் விவாதத்தைத் தவிர்க்கிறார்கள். எனவே, அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. அவர்கள் விவாதத்தை விரும்புவதில்லை, அதனால்தான் இடையூறு செய்கிறார்கள்.
காங்கிரஸ் நியாயமான விவாதத்தை விரும்பவில்லை; ஏனெனில் உண்மை வெளிவந்தால், நாட்டின் இளைஞர்கள் சார்ந்த இந்த உணர்வுபூர்வமான விவகாரத்தை அரசியல் ஆக்குவது அவர்கள்தான் என்பது தெரியவந்துவிடும்.
இப்போதும் கூட, எதிர்க்கட்சிகளிடமும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: வாருங்கள், விரிவான விவாதத்தில் ஈடுபடுங்கள், பிரச்சினைகளை இங்கே விவாதியுங்கள். கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்பட்டால் அரசு அதற்கான பதில்களை இங்கே அளிக்கும், ஆனால் முதலில் விவாதியுங்கள்.
பதிலளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களைக் கூச்சலிட்டுப் பேசவிடாமல் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. அவையின் தலைவர் பேசத் தயாராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் இடையூறு செய்வது மட்டுமே; அவர்களுக்குத் தீர்வுகள் தேவையில்லை.
வினாத்தாள் கசிவு என்பது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். அரசு இதில் அக்கறை காட்டாமலோ அல்லது பதில் தெரிவிக்காமலோ இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வினாத்தாள்களை வெளியே விட்டவர்கள், வாங்கியவர்கள், விற்றவர்கள் என இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கியிருந்த பெற்றோருக்கு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற நம்பிக்கையை பிரதமரின் அறிவிப்பு அளித்துள்ளது. நாட்டின் இளம் தலைமுறைக்கு எதிராக குற்றம் செய்தவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இதற்கான விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் கைது நடவடிக்கைகள், மறுதேர்வு மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு அரசு செவிசாய்த்து வருகிறது. அதேவேளையில், உயர்கல்விக்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் உள்ள இளைஞர்களும் இச்சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.
வினாத்தாள் கசிவு முதலில் மனவேதனையை அளித்தாலும், அதைப் பயன்படுத்தி இன்னும் சிறப்பாகத் தயாராகி, சிறந்த தேர்ச்சி பெற்ற இளைஞர்களும் உள்ளனர்; சவால்களை ஏற்றுக்கொண்டு வெற்றிகண்டவர்களும் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசும், பிரதமரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.