நரேந்திர சிங் தோமர் 
இந்தியா

விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் இல்லை - மத்திய விவசாயத்துறை மந்திரி உறுதி

விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்து  மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசியதாவது: ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை எதிர்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. 

விவசாயிகள் போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு போன்றவை சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் உள்ளது. பிப்ரவரி 8, 2022 நிலவரப்படி, 11.78 கோடிக்கும் அதிகமான விவசாய பயனாளிகளுக்கு பல்வேறு தவணைகள் மூலம் சுமார் ரூ.1.82 லட்சம் கோடி நிதிப் பலன்கள் வழங்கப் பட்டுள்ளன. அவர்களில், 48.04 லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே, இத்திட்டத்தின் கீழ், ஏறத்தாழ 11.30 கோடி பயனாளிகள் தகுதியுடையவர்களாக உள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டு காலத்திலும் 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீத பங்குடன் ரூ. 3,09,939 கோடியில் விவசாய ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.