இந்தியா

டெல்லியில் பெண்கள் Night shift வேலைக்கு செல்ல அரசு அனுமதி

கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். பணிக்கு வரவும் பணி முடித்து திரும்பவும் போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும்.

மாலை மலர்

பெண்கள் இரவுப் பணி செய்ய அனுமதித்து டெல்லி தொழிலாளர் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும் இரவுப் பணிகளில் ஈடுபடுத்த நிறுவனங்கள் பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ சம்மதம் பெற வேண்டும்.

பணிக்கு வரவும் பணி முடித்து திரும்பவும் போக்குவரத்து வசதி மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு உட்பட போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுவனங்கள் செய்ய வேண்டும். மேலும் மதுபான கடைகளில் பெண்கள் இரவுப் பணி செய்வதற்கு மட்டும் தடை நீடிக்கும்.

பெண்கள் இரவுப் பணியில் ஒரு நாளைக்கு 9 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஜூலையில் அறிவித்த இந்தச் சீர்திருத்தம், 1954 டெல்லி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகளை திருத்தியதன் மூலம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே பெண்கள் இரவு நேரப் பணி செய்ய அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.