இந்தியா

கோதாவரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டது- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ரெயில் பெட்டிகள் குலுங்கியதை அறிந்த ரெயில் எஞ்சின் டிரைவர் சுதாரித்துக்கொண்டு திடீரென பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார்.அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

Suresh K Jangir

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் நோக்கி கோதாவரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

இன்று காலை 6 மணி அளவில் ரெயில் ஐதராபாத் டி.பி.நகர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 5 பெட்டிகள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது.

இதனால் ரெயில் பெட்டிகள் குலுங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரெயில் பணிகள் அலறி கூச்சலிட்டனர்.

ரெயில் பெட்டிகள் குலுங்கியதை அறிந்த ரெயில் எஞ்சின் டிரைவர் சுதாரித்துக்கொண்டு திடீரென பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த ஐதராபாத் ரெயில் நிலைய அதிகாரிகள் பயணிகளை மீட்டு பஸ் மூலம் அந்தந்த பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.