புதுடெல்லி:
சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப இயற்கை எரிவாயுவின் விலையை ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் மத்திய அரசு மாற்றியமைக்கிறது.
மின்சாரம் மற்றும் உரம் தயாரிப்பதற்கும், வாகனங்கள் இயக்குவதற்கும் (சி.என்.ஜி.) இந்த எரிவாயு பயன்படுத்தப்படுவதுடன், குழாய்கள் மூலம் (பி.என்.ஜி.) வீடுகளுக்கு அடுப்பு எரிக்கவும் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் தற்போது எரிசக்தி விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதை அடிப்படையாக கொண்டு இயற்கை எரிவாயுவின் விலையை மத்திய அரசு 40 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. இது வரலாறு காணாத விலை உயர்வாக அமைந்து இருக்கிறது. இதன் மூலம், அக்டோபர் 1 (இன்று) முதல் மார்ச் 31 வரையிலான விலையானது ஜூலை 2021 முதல் ஜூன் 2022 வரையிலான சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு அமையும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
இயற்கை எரிவாயு விலை இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலுக்குப்பின் 3-வது முறையாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.