கர்நாடகாவின் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு 3 இலவச டிக்கெட்டுகளும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு 2 இலவச டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம், கர்நாடக கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தங்களுக்கு போதிய அளவில் விஐபி பாஸ்கள் வழங்கப்படுவதில்லை என்று சட்டப்பேரவையில் அம்மாநில எம்.எல்.ஏ-க்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் "நாங்கள் விஐபி-க்கள், எங்களால் பொதுமக்களைப் போல வரிசையில் நின்று டிக்கெட் வாங்க முடியாது" என்றும் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக கர்நாடக கிரிக்கெட் சங்கத்திடம் பேசுவதாக டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர்களுக்கு 3 இலவச டிக்கெட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச போட்டிகளுக்கு 2 இலவச டிக்கெட்டுகள் தவிர, மேலும் 2 டிக்கெட்டுகளைப் பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலவசமாக பெற விருப்பமில்லாத எம்.எல்.ஏ-க்கள், தங்களுக்கு டிக்கெட் வேண்டாம் என்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தால் அவர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.