மகாராஷ்டிர பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், கட்சியின் மும்பை ஐடி பிரிவின் முன்னாள் தலைவருமான ஆர்த்தி சாத்தேவை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்நிலையில் அவர் தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகி நியமிக்கப்பட்டார்.
ஆர்த்தி சாத்தே பிப்ரவரி 2023 முதல் ஜனவரி 2024 வரை கட்சிப் பதவிகளை வகித்தார். பின்னர் அவர் ராஜினாமா செய்தார்.
இது வெட்கமற்ற செயல் என்றும், ஜனநாயகத்தை கேலி செய்வது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, மக்களவை சபாநாயகரிடம் அவசர தீர்மானம் ஒன்றை காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் அளித்தார்.
இருப்பினும், ஆர்த்தி தனது கட்சி உறுப்பினர் பதவியை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராஜினாமா செய்ததாகவும், இப்போது அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாஜக கூறுகிறது.