இந்தியா

பா.ஜ.க.வில் இணைந்தார் முன்னாள் பிஜு ஜனதா தள எம்.பி.

பிஜு ஜனதா தளத்தின் மாநிலங்களவை எம்.பி. சுஜித் குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தவர் சுஜித் குமார். இவரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுஜித்குமார், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரிடம் கொடுத்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்த சுஜித்குமார் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.