இந்தியா

விமான தாமதத்தால் இந்த ஆண்டு மே மாதம் வரை 11 லட்சம் பயணிகள் பாதிப்பு

2021-ம் ஆண்டில், 8.03 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14.83 லட்சமாக இருந்தது.

மாலை மலர்

விமான தாமதத்தால் இந்த ஆண்டு மே மாதம் வரை 11 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 13 கோடி ரூபாயை வழங்கியுள்ளன என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023-ம் ஆண்டில், விமான தாமதங்கள் காரணமாக 22.51 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக விமான நிறுவனங்கள் ரூ.26.53 கோடிக்கு மேல் செலவழித்தனர். இதேபோல் 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14.83 லட்சமாக இருந்தது. இது தொடர்பாக விமான நிறுவனங்கள் செலுத்திய தொகை ரூ.15.87 கோடிக்கும் அதிகமாக இருந்தது.

இந்தத் தகவல்களை மக்களவையில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்தார்.

2021-ம் ஆண்டில், 8.03 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக விமான நிறுவனங்கள் செலவழித்த தொகை ரூ.3.91 கோடியாக இருந்தது. 2020-ம் ஆண்டில், கோவிட் தொற்று விமானத் துறையைத் தாக்கிய ஆண்டாக பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் விமான தாமதத்தால் மொத்தம் 2.06 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக விமான நிறுவனங்கள் செலவழித்த பணம் ரூ. 62.07 லட்சமாகும்.

திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ), ஒப்புதல் அளித்த அட்டவணையின்படி தங்கள் விமானங்களை இயக்குகின்றன. இருப்பினும், வானிலை, தொழில்நுட்பம், செயல்பாட்டு போன்ற பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் விமானங்கள் தாமதமாகின்றன," என்று அமைச்சர் கூறினார்.