நுசைபா 
இந்தியா

கேரளாவில் பரிதாபம்- மீன் பிரியாணி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

ஓட்டலில் மீன் பிரியாணியை பார்சல் வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்டனர். மீன் பிரியாணி சாப்பிட்டதால் பெண் இறந்ததாக உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

திருச்சூர்:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே பெரிஞ்சனம் ஊராட்சி பகுதியில் ஓட்டல் உள்ளது. இங்கு கடந்த 25-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சிலர் மீன் பிரியாணி சாப்பிட்டனர். மேலும் ஓட்டலில் மீன் பிரியாணியை பார்சல் வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்டனர். ஆனால் அந்த ஓட்டலில் மீன் பிரியாணி சாப்பிட்ட 178 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சென்று உணவு மாதிரியை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். மேலும் அந்த ஓட்டலை மூடி 'சீல்' வைத்தனர்.

பெரிஞ்சனம் அருகே குற்றியக்கடவு பகுதியை சேர்ந்த நுசைபா (வயது 56) என்பவரும் அதே ஓட்டலில் 25-ந்தேதி மீன் பிரியாணி பார்சல் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளார். மறுநாள் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மீன் பிரியாணி சாப்பிட்டதால் பெண் இறந்ததாக உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.