இந்தியா

உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

தீயின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் தீயணைப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத், இந்திராபுரம் பகுதியில் உள்ள கவுர் கிரீன் சொசைட்டியில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பில் 9-வது மாடியில் பற்றிய தீ 13-வது மாடி வரை பரவியது. தீயின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் தீயணைப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

குடியிருப்பில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக காணப்பட்டது. தீயணைப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அந்த குடியிருப்பில் சிக்கியிருந்த ஒரு முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டார். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்து தொடர்ந்து தீயைக் கட்டுப்படுத்தின. ஏ.சி. கம்ப்ரசர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.