இந்தியா

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் தீவிபத்து - 8 பேர் பலி!

உருகிய இரும்பு சுமார் 1,600 டிகிரி செல்சியஸ் அளவில் மிகவும் சூடாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆலையின் உருக்கு உலை பிரிவில் (Steel Melt Shop - SMS-2) மிக அதிக வெப்பநிலையில் உருகிய இரும்பை ஏற்றிச் சென்ற கலம் திடீரென வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

உருகிய இரும்பு சுமார் 1,600 டிகிரி செல்சியஸ் அளவில் மிகவும் சூடாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீவிபத்து ஏற்பட்டபோது சம்பவ இடத்தில் பணியில் இருந்த தொழிலாளர்களில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்ததும் ஆலையின் தீயணைப்புப் படையினரும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளநிலையில், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.