இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணியை மேற்கொண்டது. தற்போது 3ம் கட்ட பணிகளையும் அறிவித்துள்ளது.
தேர்தலில் முறைகேடு நடப்பதை தவிர்க்கும் வகையில் உயிரிழந்தோர், நிரந்தரமாக புலம் பெயர்ந்தோர், வெவ்வேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தோர் ஆகியோரை கண்டறிந்து அவர்களது பெயர்களை நீக்குவதற்காக இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணி மூலம் தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. மேலும் தவறான திருத்தங்களால் சில தகுதியுள்ள வாக்காளர்களும் நீக்கப்பட்டனர். இதனால் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த பணியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசியல் கட்சியினர், தனிநபர்கள், சமூக அமைப்புகள் என பலதரப்பினர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அத்தீர்பில்,
“தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர். பணி சட்டரீதியாக செல்லும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி சட்டவிரோதமானது அல்ல. 1950 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது அல்ல.
வாக்காளர் பட்டியல் திருத்த சட்டத்தின் 16-வது பிரிவின் கீழ் வாக்காளர் விதிகளில் குடிமக்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் தேர்தல் ஆணையத்தின் அந்த செயல்முறையை நீதித்துறை மறுஆய்வு செய்ய முடியும்.
சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்ற இலக்குடன் நேரடி தொடர்புடையது என்பதால் எஸ்.ஐ. ஆர். செய்யும் பணி சரியானதே.
எஸ்.ஐ.ஆர். செயல் பாடு விகிதாச்சார தன்மை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்கிறது என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம். எஸ்.ஐ.ஆர். செயல் முறையை மேற்கொண்டதன் மூலம் தேர்தல் ஆணையம் தனது சட்டரீதியான அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதாக கூற இயலாது. எஸ்.ஐ.ஆர். பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
எனினும் தேர்தல் ஆணையத்தின் எதிர்மறையான முடிவு அந்த நபர் இந்திய குடிமகன் அல்ல என்ற உறுதியான முடிவுக்கு வழி வகுக்காது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கு மட்டுமே.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதன் விவரத்தை தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் குடியுரிமை தொடர்பான அமைப்பு அல்லது அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் அந்த அமைப்பு அல்லது அதிகாரி சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கி விளக்கம், கருத்துக்கள் கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.
நீக்கப்பட்டவர்களின் மேல்முறையீடுகள் மீது அடுத்த உள்ளாட்சி, சட்டசபை, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முடிவெடுக்க வேண்டும்.” என தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.