இந்தியா

போலீஸ் அதிகாரி உதவியுடன் மகளை ஆணவக் கொலை செய்த தந்தை | Andhra Pradesh

தான் உடுத்திய உடையுடன் காதில் அணிந்திருந்த கம்மலை கூட கழற்றி வைத்துவிட்டு தான் சென்றேன் என்று சவுடேஸ்வரி கூறியும் போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லாவை சேர்ந்த வியாபாரி சந்திர சீனு. இவர்களது மகள் சவுடேஸ்வரி (வயது 22) நாகராஜ் என்பவரை காதலித்தார்.

அரசு ஆசிரியருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி சவுடேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி நாகராஜை திருமணம் செய்து கொண்டார்.

மகளை காணவில்லை என்றும், வீட்டில் இருந்து 25 பவுன் தங்க நகைகளையும் காணவில்லை என்றும் போலீசில் சீனு புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுடேஸ்வரியை தேடி வந்தனர். நாகராஜின் நண்பரிடம் விசாரணை நடத்தியதன் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து போலீசார் நாகராஜ், சவுடேஸ்வரியை கண்டுபிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

கட்டிய துணியுடன் காதில் அணிந்திருந்த கம்மலை கூட கழற்றி வைத்துவிட்டு தான் சென்றேன் என்று சவுடேஸ்வரி கூறியும் போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை.

5 நாட்கள் தந்தையின் வீட்டில் தங்கிவிட்டு, கணவர் வீட்டுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்படி சவுடேஸ்வரி தந்தையுடன் சென்றார். ஆனால் கடந்த மாதம் 19ந்தேதி சவுடேஸ்வரி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து அவருடைய தந்தை சீனுவிடம் விசாரித்தபோது, தலையணையால் அமுக்கி மகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சந்திரசீனுவை கைது செய்தனர். சந்திரசீனுவிடம் பணம் வாங்கிக்கொண்டு கொலையை மறைக்க காவல்துறை அதிகாரி ஒருவர் அவருக்கு உதவியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக உயர் அதிகரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். அந்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.