உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய் 17.29 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மூன்று வங்கி ஊழியர்களுக்கு எதிராக அதிகாரிகள் தேடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூபாய் 17.29 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்த விசாரணையில் கடந்த ஜூலை 6 அன்று, பணப் பரிமாற்ற வலையமைப்பு மூலம் சஹாரன்பூரிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஜெய்ப்பூர் அலுவலகத்திற்கு ரூபாய் 111 கோடி ரொக்கம் அனுப்பப்பட்டுள்ளது.
பணத்தில் ரூ. 500 கள்ள நோட்டுகளைக் கொண்ட 1,900 கட்டுகளும், ரூ. 200 கள்ள நோட்டுகளைக் கொண்ட 800 கட்டுகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பி.என்.பி வங்கியின் ஜகத்ரி கிளை மேலாளரான அமித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சிரேஷ்ட கோட்ட மேலாளர் ரவி குமார் கான்சே மற்றும் சோபியா மார்க்கெட் பணப் பெட்டக மேலாளர் சுஷில் குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, புலனாய்வுக் குழு அதிகாரிகள் மூன்று வங்கியின் மேலாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்தி, மின்னணு சாதனங்களையும் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
நேபாள எல்லைக்கு அருகிலோ அல்லது எல்லையை கடந்தோ செயல்படும் குழுக்களுடன், வங்கி மேலாளர்கள் மூவருக்கும் தொடர்பு இருந்ததா என்பதை அறிவதற்காக, அவர்களின் தொடர்புகளையும் நடமாட்டங்களையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட வங்கி மேலாளர்கள் நேபாளத்திற்கு தப்பி செல்லக்கூடும் என்பதால், அவர்களுக்கு எதிராக புலனாய்வு துறை அதிகாரிகள் தேடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
வங்கியின் பணப் பெட்டிக்குள் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் எவ்வாறு புழக்கத்திற்குள் வந்தன என்பது குறித்தும், அவற்றில் சில பின்னர் முறையான வங்கி வழிமுறைகள் வழியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்க முடியுமா என்பது குறித்தும் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.