இந்தியா

திருப்பதி பிரமோற்சவ விழாவில் சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் பவனி

சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இன்று காலை பிரமோற்சவ விழாவில் சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடந்தது. மாட வீதிகளில் ஏழுமலையான் பவனி வந்தார்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

நேற்று ஏழுமலையான் கோவிலில் 62,745 பேர் சாமி தரிசனம் செய்தனர். 24,451 பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.3.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 19 காத்திருப்பு அறைகள் நிரம்பியது. 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.