புதுடெல்லி:
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன. நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவில் சுவற்றில் எழுதப்பட்ட வாசகங்களுடனான புகைப்படங்களை இந்து- அமெரிக்கன் அறக்கட்டளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமெரிக்க கோவில் சுவரில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் எழுதிய எதிர்ப்பு வாசகங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மந்திரி ஜெய்சங்கர், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் இதுபோன்ற சக்திகளுக்கு இடம் அளிக்கக்கூடாது. அங்குள்ள இந்திய தூதரகம் அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.