இந்தியா

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிறையில் உயிரிழப்பு

ஆயுள் தண்டனையை எதிர்த்து சஜ்ஜன் குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் மரணம் அடைந்தார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தின்போது டெல்லி பாலம் காலனி பகுதியில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி ஐகோர்ட் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.

இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. மேலும், 1984-ம் ஆண்டு கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கிலும், 2025-ம் ஆண்டு சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி சரஸ்வதி விஹார் பகுதியில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக இந்த தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஜ்ஜன் குமார் உடல்நிலை இன்று திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.