நேபாள நாட்டின் எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 8848.86 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது.
இந்த சிகரத்தில் 274 பேர்களுடன் இணைந்து இந்தியாவை சேர்ந்த மூன்று பேர் மலையேற்றத்தில் ஈடுபட்டு, நேற்று மாலை 5.30 மணியளவில் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளனர்.
இதையடுத்து மலையேற்றத்தில் ஈடுபட்ட நபர்கள், நான்கு ஷெர்பா மீட்பு குழுவினர் உதவியுடன் சிகரத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.
அப்போது இந்தியாவை சேர்ந்த அருண்குமார் திவாரி மற்றும் சந்தீப் ஆரே ஆகிய இருவருக்கும் அதிகமான உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரையும் மீட்ட ஷெர்பா மீட்புக் குழுவினர், அவர்களை சிகரத்தில் இருந்து கீழே உள்ள முகாமிற்கு கொண்டுவந்த போது இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து பேசியுள்ள நேபாளத்தின் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிஷி பண்டாரி, “சிகரத்தில் இருந்து கீழே இறங்கும்போது அவர்கள் இருவரும் மிகவும் சோர்வாக இருந்தனர்.
வழிகாட்டிகள் உதவியோடு எவ்வளவோ முயன்றும், அவர்களை காப்பாற்ற முடியாமல் போனது” என்று தெரிவித்துள்ளார்.