இந்தியா

EPFO 3.0 | UPI மூலம் பணத்தை எடுக்கும் வசதி அறிமுகம்

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியை இனி சில வினாடிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஊழியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதற்கான கால அளவு 7 முதல் 10 நாட்கள் வரை இருந்தது. தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள EPFO 3.0 கட்டமைப்பில்,

இந்த கால அளவு குறைக்கப்பட்டு சில வினாடிகளில் பணத்தை எடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும்போது சரியான ஆவணங்கள் இல்லாமல் நிராகரிக்கப்படுவது மற்றும் நீண்ட தாமதமான பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட சிக்கல்களை EPFO 3.0 நேரடியாக சரி செய்கிறது.

தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள சேவை மூலம் உறுப்பினர்கள் தங்களின் பணத்தை எடுப்பதற்கு தகுதியான இருப்பை UMANG செயலி தெளிவாக காண்பிக்கும். இதன்மூலம் ஊழியர்கள் தங்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை அனுப்ப முடியும்.

UPI வசதி கொண்ட ATM-இல் பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையிலும் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் தங்களின் ஓய்வூதிய சேமிப்பை பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, மொத்த நிதியில் 25 சதவீதப் பகுதி எப்போதும் PF கணக்கில் வைப்பு வைக்கப்படுகிறது.

உறுப்பினர்கள் தங்களின் இருப்பில் உள்ள 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையிலான தகுதியான பகுதியை மட்டுமே UPI அல்லது ATM மூலம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள சேவை மூலம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.