இந்தியா

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லியின் இறுதி மற்றும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கியோகோ ஜெய்சங்கர் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளின் ஒருபகுதியாக இவர்கள் மட்டுமின்றி, டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது கிடையாது. இது வெறும் தரவு சரிபார்ப்புக்கான ஒரு நடைமுறை மட்டுமே என டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி தெளிவுபடுத்தினார்.

எதற்காக நோட்டீஸ்?

அமைச்சர் ஜெய்சங்கர், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கபில் சிபல் உள்ளிட்டோரின் தற்போதைய, முந்தைய எஸ்ஐஆர் தகவல்கள் உடன் ஒத்துப்போகவில்லை.

இவர்களது தற்போதைய விவரங்கள், கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய தீவிர திருத்தப் பணியின் தரவுகளுடன் டிஜிட்டல் முறையில் இணைக்க முடியவில்லை.

எல்.கே. அத்வானியின் மகள், மருமகள் ஆகியோருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

'UNMAPPED WITH LAST SIR'

தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை, முந்தைய திருத்தத்தில் உள்ள அதற்குரிய பதிவுடன் இணைக்க முடியாதபோது, ​​ஒரு வாக்காளர் “கடைசி மாநில வாக்காளர் பட்டியலுடன் பொருத்தப்படாதவர்” என வகைப்படுத்தப்படுகிறார் .

பதிவுகளை இணைக்க முடியாத அல்லது விவரங்களில் முரண்பாடுகள் உள்ள வாக்காளர்கள், சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அலுவலரிடம் பதில்களையும் துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒரு அறிவிப்பைப் பெறுவதால் மட்டுமே வாக்காளர் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டுவிட்டார் என்றோ அல்லது அவரது பெயர் நீக்கப்படும் என்றோ அர்த்தமாகாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லியின் இறுதி மற்றும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT