இந்தியா

‘வருகை பதிவேட்டின்போது மாணவர்கள் ‘உள்ளேன்’ என்பதற்குப் பதிலாக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லுங்கள்’ - பாஜக எம்எல்ஏ ஜனார்த்தன ரெட்டி

கல்வி நிறுவனங்களுக்குள் மத ரீதியிலான முழக்கங்களைக் கொண்டு வருவது, வகுப்பறைகளின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து.

பள்ளிகளில் தினசரி வருகைப் பதிவேடு சரிபார்ப்பின்போது, ஆசிரியர்கள் மாணவர்களின் பெயரை அழைக்கும்போது, தங்களின் வருகையை உறுதிப்படுத்த மாணவர்கள் “உள்ளேன் ஐயா அல்லது ப்ரெசண்ட் சார்” என தமிழிலோ, ஆங்கிலத்திலோ பதிலளிப்பர்.

இந்நிலையில், மாணவர்கள் உள்ளேன் ஐயா எனக்கூறுவதற்கு பதிலாக, ஜெய் ஸ்ரீராம் எனக்கூற வேண்டும் என கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார்.

கட்சியின் முன்னாள் தலைவர் பசனகௌடா பாட்டீல் யத்னாலின் முன்னர் இந்த ஆலோசனையை வழங்கியிருந்த நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து கடந்த வாரம் இவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் மற்றும் பிற மத அடையாளங்களை அணிய கர்நாடக அரசு அனுமதி அளித்தநிலையில், பாஜகவின் இந்த கருத்துகள் வந்துள்ளன.

மே.13 அன்று பள்ளிகளில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற முந்தைய பா.ஜ.க அரசின் உத்தரவை தற்போதைய கர்நாடக அரசு திரும்பப்பெற்றது.